Showing posts with label கம்யூனிஸ்டு. Show all posts
Showing posts with label கம்யூனிஸ்டு. Show all posts

Oct 26, 2009

கம்யூனிஸ்ட் எப்பவும் இப்படிதானா?




இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு காலத்தில் மாஸ்கோதான் வழிபடும் கோயிலாக விளங்கியது. ஸ்டாலிந்தான் அவர்களின் தலைவணங்கி வந்த கடவுள். புரட்சி, வர்க்கப் போர், முதலாளித்துவ ஒழிப்பு, ரத்தக்களறி ஆகிய வார்த்தைகள் அவர்களுடைய மூலமந்திரமாக விளங்கின.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு சீனாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமலுக்கு வந்தது. உடனே பீகிங் நகரை மாஸ்கோவுடன் தங்கள் இரண்டாவது கோயிலாக சேர்த்துகொண்டனர். மாஸேதுங் மற்றொரு கடவுளானர்.

திடீரென்று கம்யூனிஸ்டு சீனா, இந்திய எல்லையில் ஊடுருவி பன்னிரண்டாயிரம் சதுர மைல்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டுவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக்க்காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாட்டில் அதற்கிருந்த சிறிதளவு ஆதரவையும் இழக்க நேர்ந்தது. கேரளத்தில் நடைபெற்ற மறு தேர்தலிலும் சரி, நாட்டின் பொது தேர்தலிலும் சரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அடியோடு குடை சாய்ந்தது.

"இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதெப்படி?" என்பதைச் சென்ற வாரம் ஹைதராபாத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் யோசிக்கலாயிற்று. சீனா பற்றி மிக நாசூக்கான வகையில் ஒரு தீர்மானம் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பைப் பெரிதுபடுத்தாமலும், அதே சமயத்தில் இந்திய அரசாங்கத்தின் 'சீன'க் கொள்கையை ஆதரித்தும் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 'சீனா பலாத்காரமாக இந்திய மண்ணை ஆக்கிரமித்துள்ளது அநியாயம்' என்று கண்டித்து ஒரு வார்த்தைகூடக் காணப்படவில்லை.

"ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பகுதியிலிருந்து சீனப் படைகள் பின்வாங்கி, எல்லையில் ஒரு ராணுவ சூன்யமான பிரதேசம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேலும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்கும். இதற்கு ஒப்புக் கொண்டால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்ற இந்திய பிரதமரின் கோரிக்கைக்கு சீனா இணங்க வேண்டுமென்று தீர்மானம் வற்புறுத்தாது ஏன்? நாட்டின் பாதுகாப்பைவிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சீனாவின் நல்லெண்ணம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.

'நம் எல்லை எதுவோ அது நமக்கே சொந்தம். அதை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்று புதிர் போடுகிறார் கம்யூனிஸ்டு தலைவர் டாங்கே. ஆனால், எது நம் நாட்டின் எல்லை என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை, சீனப் படங்களில் குறிப்பிட்டுள்ள எல்லையைத்தான் சொல்லுகிறாரோ?

ஆனந்த விகடன் 2.9.62

டிஸ்கி: இது ஆனந்த்விகடன் 28.10.09 இதழில் பொக்கிஷம் பகுதியில் வந்தது. கம்யூனிஸ்டு கட்சி சீனா ஆக்கிரமிப்பு மற்றும் அக்கிரமம் பற்றி அப்பவும் எதுவும் சொல்லவில்லை இப்பவும் எதுவும் சொல்லவில்லை.